
டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்குப் பிறகான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளது.
டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். அதேபோல பந்துவீச்சைப் பொறுத்தவரையில், இந்திய அணியின் ரேனுகா சிங் 5-வது இடத்தில் உள்ளார். ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 60 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் அவருக்கு தரவரிசையில் முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய ரேனுகா சிங் நான்கு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் முதல் 4 இடங்களில் சோஃபி எக்கல்ஸ்டோன், சாரா கிளன், தீப்தி சர்மா, ஷதியா இக்பால் உள்ளனர்.
பேட்டிங்கில் முதல் மூன்று இடங்களில் பெத் மூனி, தஹிலா மெக்ராத் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.