நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

சஞ்சு சாம்சன் அவுட்டான விதம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி வீழ்த்தியது.

முதலில் விளையாடிய தில்லி அணி 221 ரன்கள் குவித்த நிலையில், இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்காக அபாரமாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சான் 16-வது ஓவரில் 46 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அவுட்டானார்.

முகேஷ் குமார் வீசிய 16-வது ஓவர் 4-வது பந்தை சஞ்சு சாம்சன் தூக்கி அடித்த நிலையில், பவுண்டரி கோட்டுக்கு மிக அருகாமையில் ஷாய் ஹோப் பிடித்தார். அது சிக்ஸா?, கேட்சா? என்று கள நடுவர்களால் முடிவெடுக்க முடியாததால் மூன்றாவது நடுவரை நாட, அவர் அவுட் கொடுத்தார்.

வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் அணி 26 பந்துகளில் 60 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், அவுட் கொடுக்கப்பட்டதால் கள நடுவர்களுடன் சிறிது நேரம் சஞ்சு சாம்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், ஐபிஎல் விதிகள் பிரிசு 2.8-இன் கீழ் லெவல் 1-படி சஞ்சு சாம்சன் நடத்தை விதியை மீறியதை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, நடுவரின் முடிவுப்படி போட்டியின் ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா கூறியதாவது:

”இது பல முறை பார்க்க வேண்டிய விஷயம், சில கோணங்களில் கால் பவுண்டரி கோட்டை தொட்டது போன்று நீங்கள் நினைக்கிறீர்கள். மூன்றாவது நடுவர் தீர்ப்பளிப்பதற்கு கடினமான சூழல் அது. ஆட்டம் முக்கியமான கட்டத்தில் இருந்தது. வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருந்தாலும், நாள் இறுதியில் நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்ளவேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com