
சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட அரையிறுதியில் வென்ற பிஎஸ்ஜி அணியின் ஆட்ட நாயகன் தானில்லை கோல் கீப்பர்தான் என விடின்ஹா கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கின் ஆர்செனல் அணியுடனான முதல் கட்ட அரையிறுதியில் பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியின் முதல் 4ஆவது நிமிஷத்திலேயே பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பேலே கோல் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியின் விடின்ஹா ஆட்டநாயகன் விருது பெற்றார். இவர் தனது எக்ஸ் பக்கத்தில், “உண்மையான ஆட்ட நாயகன் கோல் கீப்பர்தான்” எனக் கூறியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜியின் கோல் கீப்பர் ஜியான்லூகி டோனாரும்மா 5 கோல்களை அற்புதமாக தடுத்தார். கால்பந்து ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த டோனாரும்மா தலைசிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராகக் கொண்டாடப்பட்டு வருகிறார்.
தனியாளாக இந்தப் போட்டியை வென்றுகொடுத்தார் எனவும் பிஎஸ்ஜி அணி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.