
சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு பிஎஸ்ஜி முன்னேறியதால் அந்த அணியின் 600 ஊழியர்களுக்கும் அதன் தலைவர் வெகுமதியை அறிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி ஆர்செனலை 3-1 என வீழ்த்தியது.
கடந்த 5 ஆண்டுகளில் பிஎஸ்ஜி முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மாறாக, தனது முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இன்டர் மிலன் அணி இறுதிக்கு முன்னேறியுள்ளது.
600 ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுகள்
ஜெர்மனியில் அலையன்ஸ் அரினா திடலில் ஜூன் 1ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், பிஎஸ்ஜி அணியின் தலைவர் அல் கெலைஃபி அந்த கிளப்பில் உள்ள 600 ஊழியர்களுக்கும் தனிப்பட்ட கடிதத்தை எழுதியுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு 600 பேருக்கும் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியுள்ளார். இந்தக் கடிதத்தை ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிரூபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கூட்டுழைப்பின் பலன்தான்
இந்த அணியின் தத்துவம், வெற்றிக்கு முக்கிய காரணம் நம்முடைய கூட்டுழைப்பின் பலன்தான். திடலில் வீரர்கள், பயிற்சியாளர்கள், தொழில்நுட்பக் குழு, பிஎஸ்ஜி அணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பங்கு இருக்கிறது.
நாம் அனைவரும் பிஎஸ்ஜி என்ற ஒரே குடும்பம் என்ற பெருமை நமக்கு இருக்கிறது. பாரிஸ், பிரான்ஸை மிகப்பெரிய மேடைகளில் பிரதிநிதிப்படுத்துகிறோம்.
இறுதிப் போட்டியில் நமது அணி இருக்க காரணமாக இருந்த நீங்கள் அனைவரும் அங்கு இருக்க வேண்டும்.
பிஎஸ்ஜி அணிக்கான உங்களது அனைத்து முயற்சிகள், அற்பணிப்பு, ஆர்வம், தொழில்பக்தி என அனைத்துக்கும் நன்றிகள். இதை அடுத்த வாரங்களிலும் தொடர்வோம் எனக் கூறப்பட்டுள்ளது.