ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!

நார்வே செஸ் தொடரில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, குகேஷ் பற்றி விஸ்வநாதன் ஆனந்த் பேசியவை.

News image

குகேஷ், பிரக்ஞானந்தா உடன் விஸ்வநாதன் ஆனந்த்

Updated On :9 ஜூன் 2026, 4:51 pm IST

நார்வே செஸ் தொடரில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, குகேஷ் பற்றிப் பேசிய விஸ்வநாதன் ஆனந்த் குகேஷுக்கு அறிவுரை வழங்கினார்.

சமீபத்தில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் வெற்றிபெற்று இந்தியாவுக்கான முதல் நார்வே தொடர் வெற்றியை பிரக்ஞானந்தா பதிவுசெய்து வரலாறு படைத்தார்.

இத்தொடரில் உலக சாம்பியனான குகேஷ் 6-ம் இடம்பிடித்தார்.

இதுபற்றிப் பேசிய இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், “நார்வே செஸ் தொடரில் அபாரமான பாணியில் பிரக்ஞானந்தா வென்றதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி 4 சுற்றுகளில் அவர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரமிக்க வைக்கும் உத்திகளுடன் அவர் விளையாடினார்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, குகேஷுக்கு அறிவுரை வழங்கிய ஆனந்த், “தற்போதைய நிலையில், குகேஷை விட பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் எதுவும் மாறலாம். ஒவ்வொருவரின் ஃபார்ம் அடிக்கடி மாறும். குகேஷ் சற்று தடுமாறுவது போலத் தெரிகிறது. அவர் பிரக்ஞானந்தாவிடமிருந்து உத்வேகம் பெற வேண்டும். விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நிலைமை மாறும் என அவர் தெரிந்துகொள்வார்” எனத் தெரிவித்தார்.

மேலும், “உண்மையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரக்ஞானந்தா அதே போலவே இருக்கிறார். சில சமயங்களில் கடுமையாக விளையாடி, சுவாரஸ்யமான வியூகங்களை வகுக்கிறார். அதுமட்டுமின்றி அவர் எப்போதுமே ஒரு போராட்டத்திற்குத் தயாராக இருக்கிறார்.

முடிவுகள் எல்லா நேரத்திலும் சாதகமாக அமையாமல் போகலாம். உண்மையில், முதல் 6 சுற்றுகளுக்குப் பிறகு, கடந்த 8, 9 மாதங்களில் அவர் விளையாடிய விதத்தில் ஒரு பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை.

ஆனால் பின்னர் ஏற்பட்ட திருப்புமுனையைப் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. ஏனென்றால் அவர் மிக சுவாரசியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று தெரிவித்தார்.

இந்திய கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைஸி இடையே உள்ள ஆரோக்கியமான போட்டி பற்றிப் பேசிய ஆனந்த், “முன் எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தில் உள்ள 3 வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் அவர்களது ஆட்டத்தை உந்தித் தள்ளுகின்றனர்.

செஸ் விளையாட்டில் இந்தியா எப்போதும் முதல் 3 இடங்களில் வந்துவிடும். நமது பலத்தை மேலும் அதிகரித்துள்ளோம். கிட்டத்தட்ட 95 கிராண்ட் மாஸ்டர்கள் நமது நாட்டில் உள்ளனர். நம்மிடம் ஒரு உலக சாம்பியன் மற்றும் உச்சநிலை ஆட்டக்காரர்கள் பலர் உள்ளனர். இந்தியா இதில் சிறந்து விளங்குகிறது. இதில், பெண்களும் இப்போது இணைந்துள்ளனர். அதனால், நாம் ரஷியாவுக்கு மாற்றாக இருக்கிறோமா? நாம் நிச்சயமாக முடஹ்ல் 3 இடங்களில் உள்ளோம். ஆனால், செஸ் விளையாட்டில் ரஷியாவின் ஆதிக்கம் வித்தியாசமானது” என்றார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான குகேஷ், வருகிற நவம்பரில் நடைபெறவிருக்கும் இந்தாண்டுக்கான தொடரில் கலந்துகொள்ள இருக்கிறார்.

Summary

Gukesh should draw inspiration from Praggnanandhaa: Viswanathan Anand's advice!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.