மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பையில் குரூப் 1-இல் இடம்பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து இலங்கை அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசாங்கா, குஷால் பெராரா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிசாங்கா 41 பந்துகளில் அரைசதம் (51) கடந்தார். பெராரா 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அசலங்கா 41 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார்.
அதன் பிறகு களமிறங்கிய ஷங்கா (25), கருணாரத்னே (3) ரன்களும் எடுத்தனர். முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 189 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வெளியேற நிகோலஸ் பூரன் 46 ரன்களையும், ஷிம்ரோன் ஹெட்மேர் 81 ரன்களையும் எடுத்தனர்.
எனினும் இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.