
விராட் கோலி அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் நாளை (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான அதன் முதல் போட்டியில் அந்த அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இதற்கிடையில் நாளை இரு அணிகளும் மோதிக் கொள்வதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விராட் கோலி அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: எந்த ஒரு அணிக்கும் விராட் கோலி மிகவும் ஆபத்தான வீரரே. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை சிறிது குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து ஒரு ரன்னில் அவர் அவுட் ஆனார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பல விதமான ஷாட்டுகளை விளையாடினார்.
விராட் கோலியால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் விளையாட முடியும். ஆனால், அவருடைய ஸ்டிரைக் ரேட்டை சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும். அவர் 130 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினால் போதுமானது. 140-150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்பதில்லை. அணியில் அவருக்கான பொறுப்பு என்னவென்றால், 15 அல்லது 20 ஓவர் வரை விளையாட வேண்டும். 60 -70 ரன்கள் குவிக்க வேண்டும். விராட் கோலி 70 ரன்கள் குவித்தால் அது சிறப்பான ஆட்டமாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.