
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் அணியாக அந்தப் பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றையப் போட்டி மழையினால் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதால், அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் அணி வீரர்களின் மத்திய ஒப்பந்தம் மதிப்பீடு செய்யப்படலாம். டி20 உலகக் கோப்பையில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கடும் அதிருப்தியில் இருக்கும்பட்சத்தில், வீரர்களின் ஊதியத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. இன்னும் எந்த ஒரு முடிவும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.