

ஈரோடு: மலைப் பகுதியில் செயல்பட்ட தாற்காலிக மின் கட்டண வசூல் மையம் மூடப்பட்டதால், ரூ. 50 மின் கட்டணம் செலுத்துவதற்கு பஸ் கட்டணமாக ரூ. 70 செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப் பகுதியைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள்.
பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட மேற்குமலை, கிழக்குமலை பகுதிகளில் 40 கிராமங்களில் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்து 500 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு உள்ளது. மேற்கு மலைக்கு உட்பட்ட கொங்காடை, பெரியூர், அக்னிபாவி, ஆலசொப்னட்டி, பட்டோபாளையம் உள்ளிட்ட மலை கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அந்தியூர்-மைசூர் சாலையில் தாமரைக்கரை வந்து சேர 20 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும். இதில், மணியாச்சி மேட்டிலிருந்து ஒன்னகரை பிரிவு வரை 5 கி.மீ. தூரம் மண் அரிப்பு ஏற்பட்டு நடந்துகூட செல்ல முடியாத அளவுக்கு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதுபோல கிழக்கு மலையில் தேவர்மலை, கத்திரிமலை பகுதியில் இருந்து தாமரைக்கரை வந்து சேர 15 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்த மலைக்கிராம மக்கள் தாமரைக்கரையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் பர்கூர் ஊராட்சி அலுவலகத்தில் தாற்காலிகமாகச் செயல்பட்ட வசூல் மையத்தில் மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்த வசூல் மையம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் மூடப்பட்டுவிட்டது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்காக 40 கி.மீ. தூரம் கடந்து அந்தியூர் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்தியூர் செல்வதற்கு தாமரைக்கரையில் இருந்துதான் பஸ் வசதி உள்ளது. மலை கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து இல்லையென்பதால், "பிக்அப் வண்டிகள்' என அழைக்கப்படும் மினி வேன்களில் தாமரைக்கரை வருகின்றனர். இந்த வேனுக்கு தாமரைக்கரை வந்து செல்ல ரூ. 50, தாமரைக்கரையில் இருந்து அந்தியூர் சென்றுவர
பஸ்ஸýக்கு ரூ. 20 என நபருக்கு ரூ. 70 செலவாகிறது. ஆனால், மின் கட்டணம் சராசரியாக ரூ. 50 தான் வருகிறது. மின் கட்டணத்தைக் காட்டிலும் பயணத்துக்கு அதிகம் செலவிட வேண்டிய நிலையில் இந்த மலை கிராமத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
"மேற்கு மலை, கிழக்கு மலையில் உள்ள அனைத்து கிராமங்களும் பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்டவை. அரசு உதவி, சான்றிதழ்கள் பெறுவது, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது என தங்களுடைய தேவைகளுக்காக இந்த மலைக் கிராமங்களைச் சேர்ந்தோர் வாரம் ஒரு முறையாவது பர்கூர் வந்து செல்கின்றனர். ஆகவே, பர்கூர் ஊராட்சி அலுவலகத்தில் வாரத்தில் ஒரு நாள் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்தால் இப் பகுதியினருக்கு பேருதவியாக இருக்கும். அதோடு, மின் கட்டணத்துக்காக தேவையற்ற செலவைக் குறைக்கலாம்' என்கிறார் பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி என்.ராமசாமி.
இது குறித்து கோபி கோட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "மின்கட்டண வசூல் தற்போது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணைத் தெரிவித்தால் அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட எந்த வசூல் மையத்திலும் கட்டணத்தைச் செலுத்த முடியும். பர்கூரில் கணினி வசூல் மையம் அமைப்பதற்கு வாய்ப்பில்லை. அங்கு நிரந்தர வசூல் மையம் ஏற்படுத்தும் அளவிற்கு அதிக மின்நுகர்வும் இந்த மலைப் பகுதியில் இல்லை. இதனால் பர்கூரில் செயல்பட்ட மின்கட்டண வசூல் மையம் மூடப்பட்டுவிட்டது' என்றார்.
தொழில்நுட்ப வளர்ச்சி பொதுமக்களின் வேலையையும், அலைச்சலையும் வெகுவாக குறைத்துவிட்டது என்று ஒருபுறம் பிரசாரம் செய்து வந்தாலும், வசதிகளில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இதைப் போன்ற மலை கிராம மக்களின் சிரமத்தையும் குறைக்க முன்வர வேண்டும் என்கின்றனர் சமூகநல ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.