விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிச் சுமையில் தமிழாசிரியர்கள்

மதுரை, மே 5: தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், போதிய பணியிடங்கள் வழங்கப்படாததால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிச் சுமையால் தமிழாசிரியர்கள் தவித்து வருகின்றனர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:57 pm

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, மே 5: தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், போதிய பணியிடங்கள் வழங்கப்படாததால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிச் சுமையால் தமிழாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சுமார் 3,334 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அரசுப் பள்ளிகள் மட்டும் சுமார் 2,100 உள்ளடங்கும்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1989}ம் ஆண்டு முதல் ஒரு தலைமையாசிரியர் பணியிடமும், 6 முதுகலை ஆசிரியர்கள் பணியிடமும் வழங்கப்பட்டு வந்தது.

2001}க்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு தலைமையாசிரியரும், 5 முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த 5 முதுகலை ஆசிரியர்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே, முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் வழங்கப்பட்டு வருகின்றன.

பொருளாதாரம், வணிகவியல், வரலாறு உள்ளிட்ட கலைப் படிப்புகளுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடம் வழங்கப்படாத நிலையே நீடிக்கிறது.

1978 முதல் 2000}ம் ஆண்டு வரை முதுகலை தமிழாசிரியர் பணியிடம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2001 முதல் முதுகலை தமிழாசிரியர் பணியிடம் வழங்கப்படவில்லை. இதனால், சுமார் 912 பள்ளிகளில் முதுகலை தமிழாசிரியர் பணியிடம் இல்லாத நிலையே உள்ளது.

சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவாக கலைப் பிரிவுகளைத் தொடங்கினால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர்} ஆசிரியர் கழகம் அல்லது பள்ளி வளர்ச்சிக் குழு நிதியின் மூலம் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், தரமான கல்வியை மாணவர்கள் பெறுவது கேள்விக்குறியாக உள்ளது.

2001}ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பல பள்ளிகளிலும் தமிழாசிரியர் பணியிடம் வழங்கப்படாததால், உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களே மேல்நிலை மாணவர்களுக்குப் தமிழ்ப்பாடத்தை போதிக்கும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் கிராமப்புற மாணவர்கள், தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கலைப்படிப்புகளில் சேர முடியாமல் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் வேறு வழியின்றி சேர்ந்து படிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால், மாணவ, மாணவியர் ஆர்வமின்றி படிப்பதுடன் குறைவான மதிப்பெண்களை எடுக்கும் நிலையும் உருவாகிட வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கவலைப்படுகின்றனர்.

மேலும், விருப்பமில்லாத பாடத்தை நிர்பந்தம் காரணமாக எடுத்துப் படிப்பதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவுமுறைகூட சில நேரங்களில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழாசிரியர்களுக்கு பணிச் சுமை:""தமிழகத்தில் 500}க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12}ம் வகுப்புகளில் 500 முதல் ஆயிரம் மாணவர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் மட்டுமே பாடம் நடத்தும் நிலை உள்ளது.

இதுமட்டுமின்றி காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு என அவ்வப்போது நடைபெறும் தேர்வுக்கான ஆயிரம் முதல் 2 ஆயிரம் விடைத்தாள்களையும் ஓரிரு தமிழாசிரியர்களே திருத்த வேண்டியுள்ளது. இதனால் பணிச்சுமையும் அதிகரித்து வருகிறது என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:

வழக்கமாக 12 நாள்களில் முடிய வேண்டிய மேல்நிலை முழு ஆண்டுத் தேர்வு மைய மதிப்பீட்டுப் பணி, தமிழாசிரியர்கள் பற்றாக்குறையால் இந்தாண்டு 22 நாள்களுக்கும் மேலாகிவிட்டது.

இதுதொடர்பாக அரசுடன் ஆசிரியர் சங்கங்கள் பேச்சு நடத்தியபோதும் முறையான பணியிடங்கள் இதுவரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என்றார் அவர்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள தமிழக முதல்வர், மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை தமிழாசிரியர்களையும் போதிய எண்ணிக்கையில் நியமிக்கக் கருணை காட்ட வேண்டும் என்பதே தமிழாசிரியர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.