பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டப்படுமா?

பண்ருட்டி, டிச. 3: கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் ஊற்று நீர் வசதி மற்றும் நேரடி பாசன வசதி பெறும் வகையில் உளுத்தாம்பட்டு - தளவானூர் இடையே பெண
பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டப்படுமா?
Updated on
2 min read

பண்ருட்டி, டிச. 3: கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் ஊற்று நீர் வசதி மற்றும் நேரடி பாசன வசதி பெறும் வகையில் உளுத்தாம்பட்டு - தளவானூர் இடையே பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் ஜீவநதியான பெண்ணையாறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் இரு மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. பண்ருட்டி வட்டம், உளுத்தாம்பட்டு கிராமம், பெண்ணையாற்றில் இருந்து பிரியும் வாலாஜா கால்வாய் கரும்பூர், பூண்டி, திருவதிகை வழியாக கெடிலம் நதி வழியாக வானமாதேவி அணைக்கட்டுக்குச் செல்லும் வழியில் 20-க்கும் மேற்பட்ட ஏரிகளும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடைந்து வந்தன.

தற்போது கடலூர் மாவட்ட பெண்ணையாற்றுப் பகுதியில் நிலத்தடி நீர் அதலபாதாளத்தில் சென்று விட்டதால் விவசாய நிலங்கள் பாசன வசதி இல்லாமல் கரம்பாக கிடக்கிறது. இதனால் உளுத்தாம்பட்டு - தளவானூர் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தினமணி நிருபரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அண்ணா கிராமம் ஒன்றியத் தலைவர் எஸ்.தஷ்ணாமூர்த்தி கூறியது:

உளுத்தாம்பட்டு - தளவானூர் இடையே பெண்ணையாற்றில் தடுப்பணை அமைத்தால் இரு மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் ஊற்று நீர் மூலமும், நேரடிப் பாசனத்தின் மூலம் பயன்பெறும். உளுத்தாம்பட்டு கிராமத்தில் இருந்து பிரிந்துச் செல்லும் வாலாஜா கால்வாய் கரும்பூர், கொரத்தி, அக்கடவல்லி, திருத்துறையூர், பூண்டி, கட்டமுத்துப்பாளையம், திருவதிகை ஏரி, கெடிலம் நதி (பண்ருட்டி) வழியாக வானமாதேவி அணைக்கட்டு சென்று கடலில் கலக்கும். இந்த கால்வாய் செல்லும் வழியில் 7 பொதுப்பணித் துறை ஏரிகளும், 7 பஞ்சாயத்து ஏரிகளும் தண்ணீர் வசதி பெறும்.

ஆனால் வாலாஜா கால்வாய் ஆக்கிரமிப்பால் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. மேலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் அமைந்துள்ளதாலும், பெண்ணையாற்றில் அமைந்துள்ள மணல் குவாரியால் நிலத்திடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. நீர் வசதியின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் உளுத்தாம்பட்டு - தளவானூர் இடையே செக்டேம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ÷விவசாயிகள் குறைக்கேட்பு கூட்டத்திலும் பேசி வருகிறோம். தமிழக முதல்வருக்கும் மனு கொடுத்துள்ளோம் என எஸ்.தஷ்ணாமூர்த்தி கூறினார்.

விவசாயத்தை ஊக்குவிக்க இலவச மின்சாரம், மானியம் என வழங்கும் தமிழக அரசு ஆறுகளுக்கு இடையே தடுப்பணைகளும், பாசனத்துக்கு பயன்படும் ஏரி, கால்வாய் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com