மழையை எதிர்நோக்கியுள்ள முந்திரி விவசாயிகள்

பண்ருட்டி, ஏப். 30: புயலில் தப்பிய முந்திரி கிளைகளில் உள்ள பிஞ்சுகளாவது கைக்குக் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் முந்திரி விவசாயிகள் உள்ளனர். இந்த ஆசை நிறைவேற வேண்டுமெனில் வருண பகவான்தான் கருணை காட்ட வேண்
மழையை எதிர்நோக்கியுள்ள முந்திரி விவசாயிகள்
Updated on
2 min read

பண்ருட்டி, ஏப். 30: புயலில் தப்பிய முந்திரி கிளைகளில் உள்ள பிஞ்சுகளாவது கைக்குக் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் முந்திரி விவசாயிகள் உள்ளனர்.

இந்த ஆசை நிறைவேற வேண்டுமெனில் வருண பகவான்தான் கருணை காட்ட வேண்டும் என வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் முந்திரி விவசாயிகள் கூறினர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் பகுதியில் 28,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் முந்திரிக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் இருந்து ஆண்டுதோறும் 22,168 மெட்ரிக் டன் முந்திரிக் கொட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.

இதை அடிப்படையாகக் கொண்டு பண்ருட்டி பகுதியில் பல்வேறு முந்திரி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. முந்திரிப் பயிர் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டப்பட்டது.

மேலும் முந்திரி சார்பு தொழில் மூலம் (முந்திரி எண்ணெய், புண்ணாக்கு) பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வந்தன.

இதனால் கிராமப் பகுதியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்புப் பெற்று வந்தனர்.

இதனால் இப்பகுதியில் கிராமப் பொருளாதார வளர்ச்சி சிறப்படைந்து இருந்தது.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே வெயில், கனமழை, கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு வகையில் மகசூல் பாதிக்கப்பட்டதால் முந்திரி விவசாயிகள் சோதனைகளை அனுபவித்து வந்தனர்.

இருப்பினும் பாதகம் இல்லாத அளவுக்கு மகசூல் கிடைத்ததால் இவர்களின் வாழ்வாதாரம் திருப்திகரமாக இருந்து வந்தது.

முந்திரி மற்றும் பலா ஒன்றையே முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு ஆண்டாண்டு காலமாக இப்பகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தனர்.

அவர்களின் ஜீவாதாரம், குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் முந்திரி மற்றும் பலா கைக் கொடுத்து வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் புயல் தாக்கியதில் கடலூர் மாவட்டமே சின்னாபின்னமானது. இந்த புயலில் கடலூர், பண்ருட்டி பகுதியில் இருந்த முந்திரி, பலா உள்ளிட்ட அனைத்து மரங்களும் வேரோடு பெயர்ந்து விழுந்தன.

பண்ருட்டி என்றாலே பலாப்பழம்தான் என அனைவருக்கும் தெரியவரும். ஆனால் புயலில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பலா மரங்கள் அழிந்துவிட்டன.

புயலால் முந்திரிக் காடுகள் கடுமையாக சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இத்துயர சம்பவம் முந்திரி விவசாயிகளை நிலைகுலைய வைத்தது.

சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் இன்னமும் முந்திரி விவசாயிகள் இந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.

அரசு சார்பில், அளிக்கப்பட்ட நிவாரணமும் போதவில்லை, அதுவும் பாதிக்கப்பட்ட அனேக விவசாயிகளுக்கு முறையாக கிடைக்கவில்லை.

இந்நிலையில் எஞ்சிய முந்திரி மரக்கிளை மற்றும் சிறு மரங்களில் பூப் பூத்துள்ளன. இதனால் 20 முதல் 30 சதவீதமாவது முந்திரிக் கொட்டை கிடைக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது அடிக்கும் வெயிலில் முந்திரிப் பிஞ்சுகள் காய்ந்து கருகி வருகிறது. எஞ்சியதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த முந்திரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த 4 நாட்களாக லேசான மழை ஆங்காங்கே பெய்துள்ளது. இதனால் எந்த

பயனும் இல்லை. இப்போதைய சூழ்நிலையில் பூமியில் தண்ணீர் நிற்கும் அளவுக்கு கோடை மழை பெய்தால், உள்ளதாவது கைக்குக் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் முந்திரி விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com