கடலூர் மாவட்டத்தில் மின் மீட்டருக்கு தட்டுப்பாடு

சிதம்பரம், ஜூன் 21: கடலூர் மாவட்டத்தில் மின் மீட்டர் தட்டுப்பாட்டினால் மின் இணைப்பு கோரியவர்கள் பதிவு செய்துவிட்டு, மின் இணைப்பு கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் அதைச்
கடலூர் மாவட்டத்தில் மின் மீட்டருக்கு தட்டுப்பாடு
Updated on
1 min read

சிதம்பரம், ஜூன் 21: கடலூர் மாவட்டத்தில் மின் மீட்டர் தட்டுப்பாட்டினால் மின் இணைப்பு கோரியவர்கள் பதிவு செய்துவிட்டு, மின் இணைப்பு கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துவிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும், விவசாயிகளும் மின் மீட்டர் பற்றாக்குறையால் காத்திருக்கின்றனர். சிதம்பரம் மட்டுமல்லாமல் பண்ருட்டி, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்புக்கான கட்டணத்தை கட்டிவிட்டு மின் மீட்டர் இல்லாததால் மின் இணைப்புக்காக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் மின் மீட்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்றும் அதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மின்துறை மானியக் கோரிக்கையின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஏ.சவுந்தரராஜன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மின் துறை அலுவலகங்களுக்கு அரசு சார்பில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்கள், அரசு நியமித்த தனியார் கடையில் மின்சார மீட்டர் வாங்கி கொடுத்தால், மின் இணைப்பு கொடுக்கலாம் என்று மின்துறை அதிகாரிகள் நுகர்வோரிடம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து சிதம்பரம், அண்ணாமலைநகர், பண்ருட்டி, கடலூர், விருத்தாசலம் போன்ற பகுதியை உள்ளடக்கிய பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் எலக்ட்ரிக்கல் கடையை மின்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இங்கு சிலருக்கு மட்டுமே மின் மீட்டர் அரசு நியமித்த விலையில் விற்றுவிட்டு, மாவட்டத்தின் வெகு தொலைவில் இருந்துவரும் வாடிக்கையாளர்கள் மின் மீட்டர் கேட்டால் மீட்டர் தீர்ந்துவிட்டது என்ற பதிலை தெரிவிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சிறிது நேரம் அங்கே இருந்து எப்படியாவது ஒரு மீட்டர் கொடுங்கள், தொலைதுரத்தில் இருந்து வருகிறோம் என்று கூறியவுடன் அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக தொகை கொடுத்தால் மின் மீட்டர் உடனே கிடைக்கும் என்ற கட்டாயத்தின பேரில் மின் மீட்டரை விற்றுவருவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அதிக பணம் கொடுத்து வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், பல கிலோ மீட்டர் தூரம் சென்று வாங்குவது பெரிதும் சிரமமாக உள்ளது என நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக மின்வாரியத்துறை அந்தந்த நகரத்திலேயே ஒரு எலக்ட்ரிகல் கடைக்கு புதிய மின் மீட்டர் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும், அவற்றை கூடுதல் விலைக்கு விற்காமல் இருப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com