கோவை வார்ப்படத் தொழிற்சாலைகளில் ரூ.17 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பு

கோவை பகுதியில் உள்ள வார்ப்படத் தொழிற்சாலைகளில் கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளால் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்புக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை பகுதியில் உள்ள வார்ப்படத் தொழிற்சாலைகளில் கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளால் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்புக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையின் முக்கியத் தொழில்களான பம்ப்செட், மோட்டார், ஜவுளி இயந்திரங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் உற்பத்திக்காக, பெரிய அளவில் 200 தொழிற்சாலைகள் உள்பட சுமார் 700 வார்ப்படத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 7 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களில் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒடிசா மற்றும் பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இங்குள்ள தொழிற்சாலைகள் சராசரியாக மாதம் 70 ஆயிரம் டன் வார்ப்புகளைத் தயாரிக்கின்றன. இவற்றின் மதிப்பு கிலோ ரூ.60 வீதம் ரூ.420 கோடி.

மின் வெட்டு, அதிகரித்துவிட்ட மூலப் பொருள்கள் விலையேற்றம், கூலி உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. மின் வெட்டு அமல் காரணமாக, ஆர்டர்களுக்கேற்ப உற்பத்தி செய்து தர இங்குள்ள வார்ப்பட நிறுவனங்களால் முடியவில்லை. இதனால் கோவைக்கு ஆர்டர் கொடுத்து வந்த நிறுவனங்கள், குஜராத்தின் ராஜ்கோட், ஆமதாபாத், மகாராஷ்டிரத்தின் சோலாப்பூர் போன்ற நகரங்களுக்கு தங்கள் ஆர்டரை மாற்றிக் கொண்டுவிட்டன.

இக் காரணங்களால் கடந்த 7 ஆண்டுகளாக மாதமொன்றுக்கு சுமார் ரூ. 200 கோடி வீதம் மொத்தம் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்புக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை ஃபோர்சா காஸ்டிங் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜி.கே.நாகராஜ் கூறியது:

மின் வெட்டு பிரச்னை காரணமாக இங்கு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் வார்ப்படத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்கிறது. தமிழகத்தில் மின் வெட்டு நீக்கப்பட்டால் மீண்டும் உற்பத்தி அதிகரிக்கும். இத்தொழிலுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார்.

கருப்பு மண் மூலம் ஹாலோ பிளாக் கற்கள்

வார்ப்படத் தொழிற்சாலைகளில் மோல்டிங் செய்யும்போது மணலை உபயோகப்படுத்துகின்றனர். இந்த மண் கருப்பு நிறத்துக்கு மாறும். இந்த மண் சில தொழிற்சாலைகளில் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகிறது.

கோவை ஃபோர்சா காஸ்டிங்ஸ் நிறுவனத்தில் கருப்பு மண்ணைக் கொண்டு ஹாலோ பிளாக் கற்களைத் தயாரிக்கின்றனர். வீடுகளின் சுற்றுச் சுவர்களைக் கட்டுவதற்கு இந்தக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மண்ணை வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்த முடியுமா என்ற கோணத்தில் ஆராய்ந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com