தமிழகத்திலிருநத்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் காய்கறி வாகனங்களுக்கு கேரள அரசு புதிதாக விதிக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து ஞாயற்றுக்கிழமை தேனி மாவட்ட வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று கேரள அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றனர்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கேரள அரசின் குமுளி சோதனைச்சாவடியில் தமிழக வேளாண் அதிகாரிகளான மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜன், மாவட்ட உரம் மற்றும் விதை தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் ஞாயற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வந்த அதிகாரிகள் கேரள அதிகாரிகளிடம் கேரள அரசின் புதிய நிபந்தனைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குள் கொண்டு செல்லப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வரும் வாகனங்கள் மத்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் பதிவும் உரிமமும் பெற்றிருக்க வேண்டும் என கேரள அரசு புதிய நிபந்தனை விதித்திருந்தது. அந்த உத்தரவு நகல்களை தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
வரும் 24ம் தேதிக்கு பின் அனுமதி சான்று உள்ள வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுப்பப்படும் என தமிழக அதிகாரிகளிடம் கேரள அதிகாரிகளின் சார்பில் தெரிவிக்கப்கப்பட்டது. புதிய உரிமம் எடுக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.