நெல்லையில் ஆர்ப்பாட்டம், மறியல் போலீஸாருடன் தள்ளுமுள்ளு: 1305 பேர் கைது
வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அனைத்து தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அனைத்து தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1305 பேர் கைது செய்யப்பட்டனர். சந்திப்பில் போராட்டக்குழுவினரை போலீஸார் கட்டாயமாக கைது செய்யதால் மோதல், தள்ளுமுள்ளு உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம் மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
முறை சாரா தொழிலாளர்களுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு எல்.பி.எப், ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏஐடியூசி, ஏஐசிசிடியூ, எம்.எல்.எப், எச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆர். மோகன் (சிஐடியூ), ஆர். சடையப்பன் (ஐஎன்டியூசி), மாஞ்சோலை எம். மைக்கேல் (தொமுச) எம். பாக்கியம் (எச்.எம்.எஸ்) ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோரிக்கையை வலியுறுத்தி அ. தர்மர் (தொமுச), எஸ். காசிவிஸ்வநாதன் (ஏஐடியூசி), ம. ராஜாங்கம் (சிஐடியூ), ஜி. ரமேஷ் (ஏஐசிசிடியூ), ஆட்டோ ஓட்டுநர் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சூர்யாபாலு, எம். ஆறுமுகம், பி. ரெங்கசாமி, சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். இதில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி ஸ்ரீபுரம் அஞ்சலம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத் தலைவர் ஏ. ஆதிமூலம் தலைமை வகித்தார். பி3 அமைப்பின் கோட்டச் செயலர்கள் எஸ்.ஏ. ராமசுப்பிரமணியன், ஜெ. குணா, பி 4 சங்க கோட்டச் செயலர் எஸ். ராமலிங்கம், ஜி.டி.எஸ். கோட்டச் செயலர் டி. செய்யதுஅகமதுகபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போலீஸாருடன் மோதல்: கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியன சார்பில் இம்மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு, வள்ளியூர், அம்பாசமுத்திரம், முக்கூடல், செங்கோட்டையில் 2 மையங்கள், தென்காசி, ஆலங்குளம், சிவகிரியில் 2 மையங்கள், புளியங்குடி, திருவேங்கடம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் ஆகிய 14 இடங்களில் மறியில் ஈடுபட்ட 345 பெண்கள் உள்பட 1305 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பில் மறியல் நடைபெற இருந்ததால் மாநகர காவல் உதவி ஆணையர் கந்தசாமி தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட ஈடுபட புறப்பட்ட தொழிற்சங்கத்தினரை போலீஸார் சாலையில் இறங்க விடாமல் கயிறு வைத்து மறித்து தடுத்தனர்.
போராட்டக்குழுவினரை வேனில் ஏறுமாறு போலீஸார் வற்புறுத்தினர். இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை கட்டாயமாக வேனில் ஏற்றியாதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. ஆர். கசமுத்து, பி. வேலுமயில், எஸ். காசிவிஸ்வநாதன், கே.ஜி. பாஸ்கரன் உள்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...