

காவிரி நதிநீரைப் பங்கிட்டு கொள்வதில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடித்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் தங்களுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரைத் தர வேண்டும் என்று தமிழகம் கேட்பதும், அதனை கர்நாடகம் மறுப்பதும், அதற்குப் பிறகு தமிழகம் நீதிமன்றம் சென்று, தனக்கான உரிமையைச் சட்டத்தின் மூலமாகக் கேட்டு பெறுவதும் தொடர்ந்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதும், தமிழர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து வருகின்றன.
கடந்த 1991-ஆம் ஆண்டு காவிரி நீர்ப் பிரச்னையில் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பல ஆயிரம் தமிழர்கள், கர்நாடகத்தை விட்டு தமிழகத்துக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை வழங்கக் கோரி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை செப்டம்பர் 20-ஆம் தேதி வரை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் வன்முறையைக் கட்டவிழ்த்தனர். இதில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 40 பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மொத்தம் 200 தமிழக வாகனங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், நூற்றுக்கணக்கான தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டன. இதில் அப்பாவி தமிழர்கள், லாரி ஓட்டுநர்களையும் கன்னட அமைப்பினர் சிலர் தாக்கி வெறியாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், செப்டம்பர் 12-ஆம் தேதி நடந்த வன்முறையால் ஏற்பட்ட பதற்றத்தால் ஒசூர் அருகே தமிழக - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி நினைவு வளைவு அருகில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அன்றுமுதல் தொடர்ச்சியாக 8 நாள்களாக அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எதுவும் கர்நாடகத்துக்குள் செல்ல அனுமதி இல்லை. அதேபோல, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனங்களும் தமிழ்நாட்டுக்குள் வர அனுமதி இல்லை. கர்நாடகத்தில் இருந்த ஒருசில தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லையான ஒசூர் வரை வந்து விடப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் இருந்தும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் அந்த மாநில எல்லையில் விடப்பட்டன.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா போல தற்போது கர்நாடக - தமிழக எல்லை உள்ளது. இரு மாநில போலீஸாரும் அவரவர் மாநில எல்லையில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதும், மாநில எல்லையில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதும் வாகா எல்லையை நினைவுபடுத்துகிறது.
இது மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்துக்கு சரக்குடன் செல்ல வேண்டிய தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் ஒசூரில் கடந்த 8 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளன. எப்போது சரக்குகளைக் கொண்டு சென்று இறக்குவோம், எப்போது வீடுகளுக்குத் திரும்புவோம் என்று லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் காத்திருக்கின்றனர்.
இரு மாநில மக்களிடையே போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. வாகா எல்லையாக மாறிய ஒசூர், என்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும், இரு மாநிலங்கள் இடையே எப்போது போக்குவரத்து தொடங்கும் என்பது இரு மாநில மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.