சென்னை: தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட பின்னரும் அதிமுக அம்மா அணியினரால் சமூக வலைத்தளங்களில் இரட்டைஇலை சின்னம் பயன்படுத்தப்படுவதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினைச் சேர்ந்த மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினைச் சேர்ந்த மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று காலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை அவருடையை அலுவலகத்தில் சந்தித்து ஆர்.கே.நகரில் நிகழும் தேர்தல் முறைகேடுகள் குறித்துபுகாரளித்தார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசும் பொழுது அவர் தெரிவித்ததாவது:
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அம்மா அணியினர் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யும் பொழுது இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்துகின்றனர். அத்துடன் அந்த சின்னமானது தனக்கு மட்டுமே உரியது போன்று தினகரன் செயல்படுகிறார்.
மேலும் ஆர்.கே,நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் தவறி விட்டது. ஓட்டுக்கு ரூ.4000 என்ற வகையிகள் தினகரன் அணியினர் பணப் பட்டுவாடாவை நடத்தி முடித்து விட்டனர்.
இவ்வாறு மைத்ரேயன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.