
அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் பின்னணியில் கூட்டுச் சதி உள்ளது என அதிமுக (அம்மா) வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரில் உள்ள பள்ளிவாசலில் தினகரன் ஆதரவு திரட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் தினகரன் கூறியது:
அமைச்சர் உள்ளிட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதால் கலக்கம் அடைந்துள்ள எதிரிகளும், துரோகிகளும் கூட்டுச் சேர்ந்து சதி செய்துள்ளனர். எப்படியாவது எங்கள் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இந்த கூட்டுச் சதியை நாங்கள் தீரமுடன் எதிர்கொள்வோம்.
சவப்பெட்டியை வைத்து பிரசாரம் செய்ததன் மூலம் நாகரிகமற்றதொரு செயலில் பன்னீர்செல்வம் அணியினர் ஈடுபட்டள்ளனர். இதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் அணியை சவப்பெட்டியில் வைத்து வாக்காளர்கள் ஆணி அடிப்பார்கள் என்பது நிச்சயம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு 57 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் பின்வாங்கப் போவது இல்லை. அதற்கான செயல்திட்டங்கள் தயாராக உள்ளன. எனவே அதிமுக (அம்மா) இத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. பின்னர் அதிமுக கட்சியும், இரட்டை இலைச் சின்னமும் மீட்கப்படும் என்றார் தினகரன்.
அப்போது உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.