சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த மழையின் அளவோடு ஒப்பிடுகையில் இந்த மாதம் தமிழகத்தில் பெய்திருக்கும் மழையானது அதிகபட்ச அளவாகும்.
இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவில், அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் இரு தினங்களைப் பொருத்தவரை, வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடைவெளி விட்டு ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்குப் பருவ மழையை பொருத்த வரை கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 16 வரை தமிழகம், புதுவையில் 18% முதல் 22% வரை மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 33% அதிகமாகும். அதன்படி, கடந்த 6 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும் என்று தெரிவித்தார்.