
சென்னை: நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி அலுவலகத்தைக் கையகப்படுத்த முதல்வர் எடப்பாடி அணி முயன்றால், விளைவுகள் விபரீதமாகும் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலாவை அதிமுகவில் இருந்து விரைவில் நீக்குவோம், நமது எம்ஜிஆர், ஜெயா டிவியை கையகப்படுத்துவோம் என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த 4 தீர்மானங்களுக்கும் நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.
தினகரன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், தினகரனால் நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டனர். எடப்பாடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களும் செல்லாது.
முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று 21 எம்எல்ஏக்களும் கூறியதுமே அவர் பதவி விலகியிருக்க வேண்டும்.
நமது எம்ஜிஆரும், ஜெயா தொலைக்காட்சியும் தனியாருக்கு சொந்தமான சொத்துக்கள். அவற்றை கைப்பற்றுவோம் என்று கூறியதில் இருந்தே, '420' என்று அவர்களை தினகரன் கூறியதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்.
அவர்கள் சொன்னபடி, நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளைக் கைப்பற்ற முயன்றால் விளைவுகள் விபரீதமாகும் என்று கூறினார்.
முன்னதாக, சசிகலா, தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கவும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து நமது எம்ஜிஆர் மற்றும் அதிமுக கொடியை கையகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.