சென்னை: சுயவிருப்பத்தின் பேரிலேயே கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்கியுள்ளோம் என்று காட்டுமன்னார் கோவில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் பேட்டியளித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்தி சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, டி.ஜி.பி மற்றும் காவல் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள விடுதியிலிருந்து அதிமுகவின் காட்டுமன்னார் கோவில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் பேட்டியளித்துள்ளார்.அப்பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
சுயவிருப்பத்தின் பேரிலேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்கியுள்ளோம். எங்களை எவரும் கட்டாயப்படுத்தவில்லை. அதேபோல சுயவிருப்பத்தின் பேரிலேயே எங்ககளது மொபைல் போன்களை அனைத்து வைத்துள்ளோம். எங்கள் மொபைல்கள் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக திமுக விசமப் பிரச்சாரம் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.