/

வரி ஏய்ப்பு செய்பவர்களே ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்படுவர்: வெங்கய்ய நாயுடு

வரி ஏய்ப்பு செய்பவர்களே ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:23 pm

DIN

வரி ஏய்ப்பு செய்பவர்களே ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
இந்திய கணக்குத் தணிக்கை கல்வி நிறுவனத்தின் தென்பிராந்திய பிரிவு , தென்னிந்திய உணவு விடுதிகள் சங்கம், உலகத் தமிழ் பொருளாதார அறக்கட்டளை, ஆர்மா மருத்துவ அறக்கட்டளை இணைந்து மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கக் கூட்டம் மற்றும் ஜிஎஸ்டி தொடர்பான கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
இதில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியது :
17 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் ஆலோசனைக்குப் பிறகே ஜிஎஸ்டி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரித்திட்டம் முதன் முதலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் கொண்டு வரப்பட்டது.
காலம் கடத்திய காங்கிரஸ் : பின்னர் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இந்த வரியைச் செயல்படுத்தாமல் பல காரணங்களைக் கூறி வேண்டும் என்றே காலம் கடத்தியது.
இந்த வரி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் கருவியாகச் செயல்படும். ஏற்கெனவே பல ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இதை நடைமுறைப்படுத்சுவது தவிர்க்க முடியாது என காங்கிரஸ் கட்சி அப்போது கூறியது. தற்போது அதே காங்கிரஸ் கட்சி இது மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது எனக் குறை கூறுகிறது.
ஒரே நாடு} ஒரே வரி என்ற சிந்தனையில் கொண்டு வரப்பட்டுள்ள ஜிஎஸ்டி நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வரி திட்டத்தை முதலில் அறிமுகம் செய்தவர் ப.சிதம்பரம்தான்.
அமல்படுத்திய போது தெளிவாக இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், இப்போது குறை கூறுகிறார். மாற்றி மாற்றிப் பேசுவது காங்கிரஸýக்கு கைவந்த கலைதான்.
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்குப் பாதிப்பு : ஜிஎஸ்டியால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக பயன் அடைவார்கள். ஆனால் யாரெல்லாம் முறையாக வரி செலுத்தவில்லையோ, வரி ஏய்ப்பு செய்கின்றனரோ அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
ஜிஎஸ்டியை அமல்படுத்த எந்த ஒரு மாநிலத்தையும் மத்திய அரசு நிர்ப்பந்திக்கவில்லை. இன்று ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் இந்த வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்.
ஆரம்ப காலத்தில் இழப்பு : தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உற்பத்தி மாநிலங்களாகத் திகழும் காரணத்தால், ஆரம்பக் காலத்தில் இந்த மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் நீண்ட கால அடிப்படையில் இது அதிக பலனைத் தரும். அதே வேளையில் இந்த மாநிலங்களுக்கான ஆரம்பகால இழப்பீட்டை மத்திய அரசு ஈடு செய்யும். தற்போது அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வளர்ச்சியில் எழுபது ஆண்டுகள் பின்னோக்கி இருந்த இந்தியாவை, தனது அயராது உழைப்பால் பிரதமர் மோடி முன்னேற்றப் பாதையில் நாட்டை கொண்டு செல்கிறார் என்றார் வெங்கய்ய நாயுடு.
தமிழக ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, இந்திய கணக்குத் தணிக்கை கல்வி நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் வி.முரளி, ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரி நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், ஆடிட்டர் வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.