அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு அதிமுக அம்மா, அதிமுகபுரட்சித் தலைவி அம்மா அணி என செயல்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலைச் சின்னம் பெறுவது தொடர்பாக லஞ்சம் வழங்கிய வழக்கில் துணைப் பொதுச் செயலர் தினகரன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 28-க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு தந்துள்ளனர்.
புதுச்சேரியில் அதிமுகவுக்கு அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா என 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் கட்சியில் பல்வேறு மாற்றம் ஏற்பட்டாலும் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தரப்பில் ஒரே கருத்துடன் நீடித்து வந்தனர்.
தற்போது தமிழகத்தில் தினகரனுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் புதுச்சேரியில் அதிமுக உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ.க்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவில் பிளவு இல்லை. கட்சியை பொருத்தவரை பொதுச்செயலர் சசிகலா. துணைப்பொதுச்செயலர் டிடிவி தினகரன். இவர்கள் தலைமையில்தான் புதுச்சேரி அதிமுக இயங்குகிறது. புதுச்சேரியில் உள்ள 4 எம்எல்ஏக்களும் முழு ஆதரவை தெரிவிக்கிறோம் என்றார்.