/

குட்கா அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய விஜயபாஸ்கர் 'கொலைக் குற்றவாளி': ஸ்டாலின் காட்டம்

பான் மசாலா, குட்கா பொருட்களுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:18 pm

DIN


சென்னை: பான் மசாலா, குட்கா பொருட்களுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குட்கா நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், தமிழகத்தில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி அளிக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் மீது தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த திமுக அனுமதி கோரியது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால், இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த ஆவணங்களில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எந்தெந்த நாட்களில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு விற்பனைக்கு அனுமதி அளித்திருக்கிறார். உயிரைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சர் 'கொலைக் குற்றவாளி' அமைச்சராக உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.