விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட ஐந்து பேரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997-2000 ஆம் ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து ரூ.1.54 கோடி வரை பணம் பெற்றது தொடர்பாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் எஸ்.ஹைதர் அலி, சையது நிஷார் அகமது மற்றும் நல்லா முகமது களஞ்சியம், ஜி.எம்.ஷேக் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2011 -ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதே வழக்கில் சையது நிஷார் அகமது, நல்லா முகமது களஞ்சியம், ஜி.எம்.ஷேக் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
தண்டனை பெற்ற அனைவரும் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாவட்ட 6 -ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.தனசேகரன், கடந்த ஜூன் 16 -ஆம் தேதி ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தண்டனையை உறுதி செய்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், பிணையில் விடுவிக்கக் கோரியும், உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா உள்பட 5 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் அனைவரையும் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஜவாஹிருல்லா உள்பட 5 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டதாக மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் பிற்பகலில் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, விசாரணை நீதிமன்றத்தில் மாதத்தின் முதல் வேலை நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.