சென்னை: பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரராக இருந்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியின் வழக்கை விசாரித்து வந்த வருமான வரித்துறை அதிகாரி 'திடீர்' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்பொழுது ரூ.140 கோடி பணம் சிக்கியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் இருந்தன.
இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்க பிரிவினர் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த விசாரணையில் சேகர் ரெட்டிக்கு அரசின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் அவரது ரூ.34 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடக்கப்பட்டன.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் ராய்ஜோஸ். இவர் இத்துடன் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோஹன ராவ் தொடர்பான வழக்கையும் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் இன்று நாக்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தற்பொழுது கேள்விகளை உருவாக்கியுள்ளது.