சென்னை: இந்த வருடத்தின் கடுமையான வெப்பமான நாள் இன்றுதான் என்று 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் இயங்கி வரும் காலநிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தனது முகநூல் மற்றும் ட்வீட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளதாவது
இன்று சென்னை நகரின் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுதான் அதிகமான வெப்ப அளவாகும். கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதிக்கு பிறகு, இன்றுதான் இவ்வளவு வெப்பம் பதிவாகி உள்ளது.
சென்னையில், இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்று. ஈரப்பதமும் மிக குறைவாகவே உள்ளது. எனவே சென்னை மக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.நேரடியாக உங்கள் தலையில் வெயில் விழாமல் பார்த்துக் கொள்ளவும். இனி வரும் நாள்களில் இதைவிட கடுமையான வெப்பம் பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.