/

ஆட்சியை தக்க வைக்கவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லி பயணம்: விஜயகாந்த்

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவே முதல் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று வருகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:35 pm

தினமணி

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவே முதல் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று வருகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கடுமையான வறட்சியால் பொதுமக்களும், விவசாயிகளும், கால்நடைகளும் தண்ணீரின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் நிவாரணம் வேண்டி போராடி வருகிறார்கள். குடிநீரின்றி பொதுமக்கள் நாள் தோறும் காலிக் குடங்களுடன் தெருவில் வந்து போராடுகிறார்கள். கால்நடைகள் தண்ணீரின்றி இறக்கிறது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், தங்கள் உட்கட்சி பிரச்னையை தீர்த்துக்கொள்ள தில்லி சென்று வருவதிலையே குறியாக இருக்கிறார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடச்சொல்லி பொதுமக்களே நேரடியாக சென்று போராடி எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அப்படி போராடும் பொதுமக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக அடித்து, உதைத்து பெண்களை இழிவு படுத்தி காவல்துறை ஆளும்கட்சியின் ஏவல்துரையாக செயல்படுகிறது. மதுவுக்கு எதிராக போராடும் பொதுமக்களை தண்டிக்ககூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறை மக்களை ஒடுக்க நினைப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் தான் காவல்துறைக்கு சம்பளம், சீருடை, பிற சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதை நினைவில் வைத்துக்கொண்டு காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் மட்டும் பெருமை பெறாது, சொல்லுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காவல்துறையே ஊக்குவித்து பாதுகாப்பு வழங்குகிறது. உதாரணமாக திருவண்ணாமலை, வந்தசாசி போன்ற பகுதியில் நடக்கிறது. சென்னை போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினரின் சீருடையை பார்த்து பலகாலம் ஆகிவிட்டது. பெருவாரியான சிக்னலில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவதில்லை, உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் இல்லை என்கிற நிலையுள்ளது. இதையும் தேமுதிக கண்டிக்கிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தக்கூடிய பொறியியல் கல்லூரிகளுக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச கல்விக்கான தொகை 14,000/- கோடி ரூபாய் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, தமிழக அரசுக்கு கல்விக்கான இலவச நிதியை வழங்கியும், தமிழக அரசு நிலுவையில் வைத்திருப்பதால், பொறியியல் கல்லூரிகளில் படிக்ககூடிய தாழ்த்தப்பட்ட மாணவர்களும், கல்லூரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு இலவச கல்விக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் பல்மருத்துவர்களுக்கான மாணவர்கள் சேர்ப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றபொழுது ஏற்பட்ட குளறுபடியினால், மாணவரகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, மக்கள் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.