

தமிழகத்தில் (செப்டம்பர் 6) புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இதில் 6 வகை விதிமீறல்களில் ஈடுபட்டால் மட்டும் அசல் ஓட்டுநர் உரிமம் கேடக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம்:
சாலை விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்கும் வகையில் வாகன ஓட்டிகள் தங்களது வாகன ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும், காவல்துறையினரோ அல்லது போக்குவரத்து துறை அதிகாரிகளோ கேட்கும்போது அதை காட்ட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு கடந்த 1-ஆம் தேதி அமலுக்கு வர இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் காரணமாக, செப்டம்பர் 5-ஆம் தேதி வரை இந்த புதிய உத்தரவு செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில். சென்னை உயர்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை, 6 ஆம் தேதியில் இருந்து புதிய உத்தரவை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் தடை ஏதும் இல்லை என தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு புதன்கிழமை (செப்.6) முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது. அதேவேளையில், அனைத்து போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கும் வாகன ஓட்டுநர் உரிமம் கேட்கப்போவதில்லை.
செல்லிடப்பேசியில் பேசியப்படி வாகனம் ஓட்டுதல், அதி வேகமாக வாகன ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பாரம் ஏற்றுதல், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லுதல், சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுதல் ஆகிய 6 விதிமுறை மீறல்களுக்கு மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அசல் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால், மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181ன்படி 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டு தண்டனையையும் சேர்த்து வழங்கலாம் என்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மேலும், அசல் வாகன ஓட்டுநர் உரிமமத்தை அனைத்து வாகன ஓட்டுகளும் வைத்திருக்கிறார்களா என்று சிறப்பு சோதனை நடத்தப்போவதில்லை. வழக்கமான முறையிலேயே சோதனை நடைபெறும்.
வாகன ஓட்டிகள் 6 விதிமுறைகளை மீறினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.