ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று முதல் அழைப்பு விடுத்திருந்த போராட்டத்திற்கு ஆசிரியர்களிடையே ஆதரவு இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளும் முழு அளவில் வியாழக்கிழமை செயல்பட்டன.
ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையை அடுத்து பல்வேறு சங்கங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளன.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 118 பள்ளிகளும் முழு அளவில் செயல்பட்டன. இதில் பணிபுரியும் 432 ஆசிரியர்களில் 10 இடைநிலை ஆசிரியர்களும் 15 பட்டதாரி ஆசிரியர்களும் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்து பள்ளிக்குச் செல்லவில்லை என்று உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் கூறினார்.
வத்திராயிருப்பு ஒன்றியத்தில் 37 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும், 27 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மட்டும் செயல்படவில்லை. மேலும் சரகத்தில் உள்ள 276 ஆசிரியர்களில் 70 ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களும் 4 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்து பள்ளிக்குச் செல்லவில்லை என்று உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மலர்கொடி கூறினார்.