தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

காவிரியை விட மெரினாதான் அரசுக்கு முக்கியமா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! 

காவிரியை விட மெரினாதான் முக்கியமா என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தொடுத்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2018, 1:29 pm

சென்னை: காவிரியை விட மெரினாதான் முக்கியமா என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தொடுத்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் எதிர் மனுதாரரான தமிழக அரசு , ‘மெரினா கடற்கரை என்பது பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடம்; அங்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த 90 நாட்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது’ என்று கூறி விட்டது. 

பின்னர் இந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், 'மெரினாவில் எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்றும், சென்னையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஏதேனும் ஒரு இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 2013-க்கு பின்னர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவது இல்லை என தமிழக அரசு தரப்பிலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காவிரியை விட மெரினாதான் முக்கியமா என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தொடுத்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:

தமிழக அரசுக்கு காவிரியை விட மெரினாதான் முக்கியமா? போராட்டம் என்றால் அதனை ஒழுங்கு படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதை விடுத்தது போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை. கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற பண்டிகை காலங்களில் அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடும். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அப்பொழுது கூற முடியுமா? அல்லது கொண்டாட்டங்களை ஒத்தி வைக்குமாறு மக்களிடம் கூற இயலுமா?

இவ்வாறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் தீர்ப்பு தேதியை ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.