மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க குழு: விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு அனுமதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துக் கொள்ள விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 8:01 pm

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துக் கொள்ள விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அதில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மருத்துவர்களின் விவரங்கள் அடங்கிய சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் அண்மையில் தாக்கல் செய்தது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்பான ஆவணங்களையும் தமிழக அரசும் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. 
இந்த ஆவணங்களையும், மருத்துவர்களின் சாட்சியங்களையும் சரிபார்த்து ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய ஆணையத்துக்கென தனி மருத்துவர் குழுவை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கோரிக்கை வைத்திருந்தார்.
தமிழக அரசு அனுமதி: இதை பரிசீலித்த தமிழக அரசு, மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக் கொள்ள ஆணையத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவக் குழுவில் 4 மருத்துவர்கள் இடம்பெறுவர் என்றும், அவர்கள் யார் என்பதையும் நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது. 
இந்தக் குழு ஆணையத்தின் விசாரணை முடிவடையும் வரை செயல்படும் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக நீதிபதியின் சந்தேகங்களுக்கு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்து இந்தக் குழு பதில் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.