பொன்னமராவதி அருகே வனப்பகுதிக்குள் ஏழாயிரம் ஆண்டுகள் பழைமையான - தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த குத்துக்கல் பெயர்த்தெறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள வனப்பகுதியில், பொன்னமராவதி செல்லும் வழித்தடத்தில் பனையப்பட்டியிலிருந்து ராங்கியம் சாலையில் சுமார் 4 கி.மீ., தொலைவில் உள்ள கண்ணனூர் வனப்பகுதியில் ஏழாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கற்குவியல், குத்துக்கல் ஆகியவை உள்ளன. இந்த கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் பாறைகளைக் கொண்டு வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மையத்தில் நெடுங்கற்கள் செங்குத்தாக நட்டு வைக்கப்பட்டுள்ளன. அவை அண்மையில் வனத்துறையினரால் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை நடுவதற்காக அழிக்கப்பட்டுள்ளதை அறிந்து அவ்விடத்துக்குச் சென்று தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மேலப்பனையூர் கரு. இராஜேந்திரன், ஆய்வாளர் மங்கனூர் ஆ. மணிகண்டன் , உறுப்பினர்கள் ம.மு.கண்ணன் , மஸ்தான் பக்ருதீன் ஆகியோர் உறுதிசெய்தனர்.
இதுகுறித்து கரு. இராசேந்திரன் மேலும் கூறியது: பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நமது முன்னோர்களின் வரலாற்றை பாறை ஓவியங்கள், ஈமச்சின்னங்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். அந்தவகையில் கண்ணனூரில் உள்ளவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுங்கல், கற்குவியல் வகையைச் சேர்ந்த நீத்தார் புதையிடமாக உள்ளது. இதன் காலம் சுமார் ஏழாயிரம் ஆண்டுகள் வரை காலக்கணிப்பைக் கொண்டது. இங்கு வாழ்ந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைத்து விட்டு அதன் மேல், வட்ட வடிவத்தில் கற்குவியலை அமைத்து அதன் மையத்தில் மென்கிர் எனப்படும் குத்துக்கல் அல்லது நெடுங்கல் நட்டு வைத்திருக்கிறார்கள்.
இது சுமார் பத்து அடி உயரத்துடன் உள்ளது. இவ்வாறு அமைப்பது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டதாகும். இந்தப் பண்பாடும் பழக்கமும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளில் இருந்து கிறிஸ்து பிறப்பதற்கு முன் 500 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்திருக்கிறது. அதற்குப் பிறகுதான் சங்க காலம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
வருங்காலச் சந்ததியினருக்கு பழங்கால வரலாற்றைச் சொல்லக் கூடிய இந்தச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
இதன் முக்கியத்துவம் தெரியாமல் வனத்துறையினர் தைலமரக் கன்றுகளை வளர்ப்பதற்காக வண்டிகளைக் கொண்டு வரலாற்றுச் சின்னங்களை அழித்திருக்கிறார்கள்.
இந்தப் பகுதிக்குள் டிராக்டர்களைக் கொண்டு உழுவதே தவறு. ஆனால் ஜேசிபி போன்ற இயந்திரங்களைக் கொண்டு பெருங்கற்காலப் பண்பாட்டு நினைவுச் சின்னங்களை உடைத்தும் கற்களைப் பெயர்த்தும் அழித்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக நெடுங்கற்கள் கொண்ட இதைப் போன்றதொரு பெருங்கற்கால வரலாற்றுச் சின்னம் வேறெங்கும் இல்லை. சென்னை மன்னர்கள் காலத்தில் பல இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகள் அறிவிக்கப்படாமல் விடுபட்டுள்ளன.
இத்தகைய நினைவுச் சின்னங்கள் மேலும் வனத்துறையினரால் அழிக்கப்படாமல் இருக்கும் வகையில் வனத்துறையினரிடமிருந்து பெற்று பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை முள்வேலி அமைத்து இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
மேலும் தொல்லறிவியல் ஆய்வாளர் ஆ. மணிகண்டன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகமான பாதுகாக்கப்பட்ட தொல்லிடங்களையும் மரபுச் சின்னங்களையும் கொண்ட மாவட்டமாகும். சென்னை தொல்லியல் வட்டத்தின் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் இம்மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் கண்ணனூர் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளும் ஏராளமாக உள்ளன. எனவே தொல்லியல் துறை புதுக்கோட்டையை மையமாக வைத்து புதிய தொல்லியல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









