கஜா புயல் மீட்புப் பணிகளில் மிகப்பெரிய சவாலான ஒன்றாக இருக்கும் வீழ்ந்த தென்னை மரங்களை அகற்றுவது என்றால் அது மிகையல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டேர் தென்னந்தோப்புகள் நாசமாயின. புயல் வீசி 40 நாள்களுக்கு மேலாகியும் இன்னமும் பல லட்சம் தென்னை மரங்கள் தோப்புக்குள்ளேயே இருக்கின்றன.
காரணம் வேறொன்றுமில்லை, நன்கு வளர்ந்த ஒரு தென்னை மரத்தை அப்புறப்படுத்த வேண்டுமானால், அறுவை இயந்திரத்துக்கான எரிபொருளுக்கு மட்டுமே ( பெட்ரோல் அல்லது டீசல்) குறைந்தது ரூ. 100 செலவாகும்!
100 தென்னை வைத்திருக்கும் சிறு விவசாயி தனது தோப்பில் விழுந்து கிடக்கும் மரங்களை தோப்பிலிருந்து அகற்ற வேண்டுமானால் சில பத்தாயிரங்களைச் செலவிட வேண்டும். ஆயிரக்கணக்கில் தென்னையை இழந்த பெரு விவசாயிகள் வீழ்ந்த மரங்களை தோப்பிலிருந்து அகற்ற வேண்டுமானால் சில லட்சங்களைச் செலவிட வேண்டும். இஃது துயரிலும் தொடரும் பெருந்துயரம்.
நெய்வத்தளி இளைஞர்கள் புது முயற்சி: இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த நெய்வத்தளி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்மாதிரி முயற்சியை கடந்த 10 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். தோப்பில் விழுந்து கிடக்கும் தென்னையை அறுத்து அழகிய மேசையாகவும், இருக்கையாகவும் மாற்றி விற்பனை செய்கிறார்கள். ஊருக்குள்ளேயே தேநீர்க் கடையில் தங்களது 4 மேசைகளையும், இருக்கைகளையும் ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். கடற்கரையோரத்திலுள்ள உணவகங்கள் தங்களுக்குத் தேவையான இருக்கைகளை தென்னை இருக்கைகளாக அமைத்தால் பார்வைக்குப் புதுமையாக இருப்பது மட்டுமல்ல, சோகத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மீட்சியாக அமையும் என்கிறார்கள்.
நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் என். நெவளிநாதன், இந்த முயற்சிக்கு முன்னத்தி ஏர். புயல் பாதித்த நாளில் இருந்து தன்னோடு சேர்ந்த 35 இளைஞர்களைக் கொண்டு களப்பணியில் இறங்கிவிட்டிருக்கிறார். நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழு என்பது இந்த இளைஞர் குழுவின் பெயர்.
தென்னை இருக்கை குறித்து நெவளிநாதன் மேலும் கூறியது:
தொடக்கத்தில் சாலைகளில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணியைத்தான் மேற்கொண்டோம். அதன் பிறகு நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டோம். கடந்த 10 நாட்களாகத்தான் இந்த யோசனை வந்தது.
4 அறுவைக் கருவிகளை வாங்கினோம். இத்தனை நாள் வேலை பார்த்தும் 10 தோப்புகளைத்தான் முடிக்க முடிந்துள்ளது. 20 ஜோடி மேசை மற்றும் இருக்கைகளைத் தயாரிக்க முடிந்துள்ளது. எனவே, புயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மீட்புக் குழுவினர் இந்த யுத்தியைச் செயல்படுத்தினால், அடுத்த ஓரிரு மாதங்களில் முழுமையான கஜா மீட்பை முடித்துவிடலாம். எல்லாப் பகுதியினரும் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் உண்மையான மீட்பு சாத்தியமே இல்லை.
சேலம், திருப்பூர் பகுதிகளில் இருந்து செங்கற்சூளை நடத்தும் வியாபாரிகளும் வந்து மரத்தை அறுத்துச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் தென்னையின் நடுப்பகுதியை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். அடிப்பகுதியும், நுனிப் பகுதியையும் தோப்பிலேயே போட்டுவிடுகிறார்கள். இது மேலும் துயரமாகிவிடுகிறது.
எரித்துவிடவும் முடியாது. நன்கு காய்ந்த தென்னையின் அடிப்பகுதியைக் கொளுத்திவிட்டால் இரு நாட்கள் எரியும். ஊரே புகை மூட்டமாகிவிடும். ஒரு மரத்துக்கே இந்த நிலையென்றால் லட்சக்கணக்கான மரங்களைக் கொளுத்தினால் நிலை என்னவாகும்.
அடிப்பகுதியை மேசையாகவும் நுனிப்பகுதியை இருக்கையாகவும் மாற்றலாம். அறுத்துப் போட்ட இரு நாட்களில் ஓரளவுக்கு காய்ந்துவிடும். உப்புத்தாள் கொண்டு மரத்தைத் தேய்த்துவிட்டு, வார்னிஷ் அடித்துவிட்டால் ஆண்டாண்டுக்கும் தாங்கும் இயற்கையான வீட்டு உபயோகப் பொருள் தயார்.இதேபோல, கேரம் விளையாட்டுக்கான மேசை, குழந்தைகள் படிப்பதற்கான மேசை, வீடுகளில் அலங்காரப் பொருள்களை வைத்துக் கொள்வதற்கான மேசை என நமது கற்பனைத் திறனுக்கேற்க உபகரணங்களைத் தயாரிக்கலாம் என்கிறார் அவர்.
புயல் நிறைய படிப்பினைகளைத் தந்திருக்கிறது. அது புயலை எதிர்கொள்வது மட்டுமல்ல, புயலுக்குப் பின்னால் நடைபெற வேண்டிய மீட்பு மட்டுமல்ல, இதுபோன்ற இயற்கைப் பொருள்களைத் தயாரிக்கும் மீட்சிக்கான அம்சங்களையும் ஏராளம் நமக்குள் படைப்பாற்றலையும் உருவாக்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |



