மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்ரவரி 2-ஆம் தேதி திடீரென விபத்து ஏற்பட்டது. வீர வசந்த ராயர் மண்டபம் முழுவதும் இதில் தீக்கிரையானதில் 30 கடைகள் எரிந்து போயின. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதிகளில் இருந்து கடைகள் அகற்றப்பட்டு, தீவிபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்கான காரணங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதியைப் புதுப்பிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வேறு எந்தக் கோயிலிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.