செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த காந்தலூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலு. தினக்கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பாலு தனது மனைவிக்கு உடல் சரியில்லாததால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பாலுவும் சென்னை சென்றுள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை பாலுவுடைய வீட்டின் பூட்டை ஒருவர் உடைத்துக் கொண்டிருப்பதை அந்த கிராமப் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்த கிராம மக்கள், அவரை கண் மூடித்தனமாக அடித்ததில், சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு கிராமிய காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்கவர்ஆவார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.