மோரீஷஸில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு முறையாகத் தமிழ் மொழி கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு துணை அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.
மோரீஷஸ் நாட்டுக்குச் சென்ற கோவை, மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீநாகசக்தி அம்மன் பீடத்தின் தலைவர் சித்தர் சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள், அந் நாட்டு துணை அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரியைச் சந்தித்து, நிலவேம்புக் கஷாயம் குறித்து விளக்கமளித்தார். பின்னர், இந்தியா வரும்போது ஸ்ரீநாகசக்தி அம்மன் பீடத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து கோவை வந்த பரமசிவம்பிள்ளை வையாபுரி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை. அந் நாட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வருத்தமளிக்கிறது. இந்திய- மோரீஷஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவு வலுவாக உள்ளது.
மோரீஷஸ் நாட்டில் 12 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகவே கற்கின்றனர். இதனால், தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரமப்படுகின்றனர். எனவே, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியைக் கற்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை மோரீஷஸ் அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், தமிழர்களின் பண்டிகைகள், பொங்கல், சிவராத்திரி உள்ளிட்டவை தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. கல்வி, சுற்றுலா மற்றும் வேளாண்மைத் துறையில் மோரீஷஸ் நாடு சிறந்து விளங்குகிறது. தமிழ் மொழியைத் தொடர்ந்து கற்று வருகிறேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.