தினமணி வாசகர்களுக்கு 'பொங்கலோ பொங்கல் ரங்கோலி போட்டி' நடைபெறவுள்ளது. கோலங்களை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் திங்கள்கிழமைக்குள் (ஜன.15) அனுப்ப வேண்டும்.
தினமணி இணையதளம் (www.dinamani.com) கடந்த மூன்று ஆண்டுகளாக தனது பாரம்பரிய வாசகர்களுடனான உறவை மேம்படுத்தும் வகையில் சில போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபரில் சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு கடிதம் எழுதும் போட்டி, நவம்பரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழு புகைப்பட போட்டி, டிசம்பரில் வேஸ்ட்லெஸ் வெட்டிங் டிப்ஸ் போட்டி என போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினமணியின் 'பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி' நடத்தப்படவுள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் வாசகர்கள் தங்களது கைத்திறனில் உருவான சிறந்த ரங்கோலி ஒன்றை புகைப்படம் எடுத்து அதை dinamani.readers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 98415 83300 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கோ அனுப்ப வேண்டும். ரங்கோலியுடன் பங்கேற்பாளரின் புகைப்படத்தையும், முகவரியையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
அனுப்பப்படும் ரங்கோலிகளில் சிறந்த 10 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மட்டும் சென்னை விருகம்பாக்கம் சந்திரா மெட்ரோ மாலில் இருக்கும் ஐநாக்ஸ் திரையரங்க வளாகத்துக்கு இறுதிச் சுற்றுக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் நேரடியாக ரங்கோலி கோலத்தைப் போட வேண்டும். கோலப்பொடிகள் தினமணி சார்பில் வழங்கப்படும்.
இறுதிச் சுற்றில் முதல் மூன்று பரிசுக்குரிய கோலங்கள் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் நிபந்தனைகளும் முடிவுகளும், தினமணி நிர்வாகத்தின் முடிவுக்கு உட்பட்டவையாகும்.