சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28,656-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமாக ஆடி மாதத்தில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆடி மாதத்தில்தான் தங்கம் விலை ராக்கெட் போல நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,176 வரை தங்கம் விலை உயர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை தங்கம் விலை ரூ.28 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்துவந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.28,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயர்ந்து, ரூ.3582-க்கு விற்பனையானது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மொத்தம் 10 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2176 வரை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.