/

நெல்லையில் ராஜிவ் சிலை தலை துண்டிப்பு: தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம்

நெல்லையில் ராஜிவ்காந்தி சிலையின் தலை சமூக விரோதிகளால் துண்டிக்கப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2019, 11:36 am

DIN

சென்னை: நெல்லையில் ராஜிவ்காந்தி சிலையின் தலை சமூக விரோதிகளால் துண்டிக்கப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், கிழக்கு கடையம் வட்டாரம், பாப்பான்குளம் பிரதான சாலையில் அமைந்துள்ள பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களது மார்பளவு திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சிதைத்து, தலையைத் துண்டித்துள்ளனர். இச்செயலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். இதைக் கண்டித்து கடையம் வட்டார காங்கிரஸ் சார்பாக சாலை மறியல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனே அவர்களை கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் சமீபகாலமாக தேசவிரோத கருத்துக்களை சமூக ஊடகங்கள் மூலமாக குறிப்பிட்ட பிரிவினர் பரப்பி வருவது மிகுந்த கவலையைத் தருகிறது. தமிழ் தேசியம் என்கிற போர்வையில் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஐக்கியத்திற்கும் உலை வைக்கிற வகையில் இத்தகைய பிரிவினைவாத குழுக்களின் நடவடிக்கைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இவர்களது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து ஒடுக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.