வெப்பச்சலனம் காரணமாக, வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஆக.17) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சாரல் மழை பெய்தது. இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்தார்.
இந்நிலையில், வேலூர் மழை 100 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக 1909-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வேலூரில் தொடர்ந்து 24 மணிநேரங்களாக பெய்த மழையின் அளவு 106 மி.மி.ஆகப் பதிவானது. இந்நிலையில், ஆகஸ்ட் 16, 2019 நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து பெய்த மழையின் அளவு 166 மி.மி.களாகப் பதிவாகியுள்ளது.
இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் பெய்த அதிக மழையாக இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.