சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காவல்துறை அனுமதியின்றி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், நடிகர் சித்தார்த், பாடகர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உரையாற்றினர்.
முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பாளர்கள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்தனர். பிறகு, காவல்துறை அனுமதி இல்லாமல் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று மாலை 5 மணியளவில், வள்ளுவர்கோட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிறகு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.