கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கிய  துணை ஆட்சியர்

டாஸ்மாக் மேற்பார்வையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் சிறப்பு பறக்கும் படை துணை ஆட்சியரை கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதன்கிழமை கையும் களவுமாகப் பிடித்தனர்.

News image
Updated On :14 பிப்ரவரி 2019, 1:28 am IST


டாஸ்மாக் மேற்பார்வையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் சிறப்பு பறக்கும் படை துணை ஆட்சியரை கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதன்கிழமை கையும் களவுமாகப் பிடித்தனர்.
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு டாஸ்மாக் சிறப்பு பறக்கும் படை துணை ஆட்சியராக இருப்பவர் குணசேகரன் (48) . இவர், கோவை, ராமநாதபுரத்தில் வசித்து வருகிறார். இவர் நான்கு மாவட்டங்களிலும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்களிடம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சில இடங்களைத் தேர்வு செய்து அங்கு டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை மாதந்தோறும் வரவழைத்து லஞ்சத் தொகை பெறுவதாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகார் சென்றது. 
 இந்தப் புகாரின் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீஸார் பொள்ளாச்சியில் ரகசிய கண்காணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர்.  அப்போது பொள்ளாச்சி -கோவை சாலை தனியார் உணவகம் அருகே டாஸ்மாக் பறக்கும் படை துணை ஆட்சியர் குணசேகரன் நின்றிருந்தார். அப்போது அவரிடம் லஞ்சப் பணத்தைக் கொடுக்க டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதைப் பார்த்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அங்கு சென்று துணை ஆட்சியர் குணசேகரனை பிடித்தனர். மேலும், பணம் கொடுக்க வந்த  கந்தவடிவேல், பிரேம்குமார், வடிவேல் உள்பட 7 மேற்பார்வையாளர்களும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர் . 
மேற்பார்வையாளர்கள் கொடுத்த ரூ. 48,000 லஞ்சப் பணம் மற்றும் கணக்கில் வராத தொகை ரூ.37,500 என குணசேகரனிடம் இருந்து மொத்தம் ரூ.85, 500 தொகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, துணை ஆட்சியர் குணசேகரன் மற்றும் லஞ்சம் கொடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் ஆகியோரை பொள்ளாச்சி தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு அழைத்துவந்து 8 மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தினர். 
விசாரணையில்,  பொள்ளாச்சி பகுதியில் மட்டும் மாதந்தோறும் ரூ. 2 லட்சத்துக்கும் மேல் லஞ்சம் பெறுவதை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் உறுதி செய்தனர். 
டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வது , டாஸ்மாக் கடை இயங்கும் நேரத்துக்கு மாறாக வேறு நேரங்களில் மது விற்பனை செய்வது, இருப்பின் அளவில் மாறுபாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக டாஸ்மாக் மேற்பார்வையாளர்களிடம் துணை ஆட்சியர் குணசேகரன் மாதம்தோறும் லஞ்சம் பெறுவது தெரியவந்துள்ளது. 
லஞ்சம் பெறும் ஆள்கள் மற்றும் கடைகள் விவரம் , பெறும் தொகை, பணம் தருபவர்கள் விவரம் போன்றவை அடங்கிய பட்டியலை குணசேகரன் கையில் வைத்திருந்ததை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.