

ஈரோடு: ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழந்துள்ள சுமை ஆட்டோ உரிமையாளர்கள் காய்கறி வியாபாரிகளாக மாறியுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்கள் நலிவடைந்துள்ளன. இந்த தொழில்களை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். அந்த வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த ஒரு மாதமாகத் தொழில்கள் நடக்காததால் சுமை ஆட்டோக்கள் ஓடவில்லை.
வாரச்சந்தைக்குப் பொருட்களை ஏற்றிச்செல்வது, ஜவுளிப் போக்குவரத்து, கால்நடைகளைச் சந்தைக்கு ஏற்றிச்செல்வது, வீட்டு உபயோக பொருட்களை எடுத்துச்செல்வது உள்ளிட்ட வேலைகளுக்கு சுமை ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. சுமை ஆட்டோக்களில் 99 சதவீதம் உரிமையாளர்களே ஓட்டுனர்களாக உள்ளனர்.
இப்போது தொழில்கள் அனைத்தும் முடங்கிய நிலையில் சுமை ஆட்டோக்கள் ஓடாததால் உரிமையாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். பெரும்பாலான சுமை ஆட்டோ உரிமையாளர்கள் வங்கிக் கடன், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி மாதம்தோறும் தவணை செலுத்தும் நிலையில் உள்ளனர்.
சுமை ஆட்டோக்கள் ஓடாததால் குடும்பத்தை நடத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், தவணை செலுத்தும் சிக்கல் வேறு உள்ளது. இந்நிலையில் தினசரி குடும்பத்தை ஓட்ட முடியாத நிலையில் பெரும்பாலான சுமை ஆட்டோ உரிமையாளர்கள் காய்கறி வியாபாரிகளாக மாறிவிட்டனர். சுமை ஆட்டோக்களில் காய்கறிகளை வாங்கி வந்து தெரு, தெருவாகச் சென்று விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஈரோடு அருகே லக்காபுரத்தை சேர்ந்த சுமை ஆட்டோ உரிமையாளர் பழனிசாமி கூறியதாவது:
ஈரோடு நகரத்தில் மட்டுமே ஜவுளி, மளிகை, மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் பணியில் 1,000-க்கும் மேற்பட்ட சுமை ஆட்டோக்கள் உள்ளன. தவிர மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்களில் மொத்தமாக சுமார் 5,000 சுமை ஆட்டோக்கள் உள்ளன. தினமும் வேலை கிடைத்தபோது, தினசரி டீசல் செலவு போக ரூ.300 முதல் ரூ.1,000 வரை வருமானம் கிடைக்கும். குடும்பத்தை நடத்தவும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் போதுமானதாக இருந்தது. ஊரடங்கால் சுமை ஆட்டோக்கள் முழுவதும் ஓடவில்லை. குடும்பத்தை நடத்த முடியாத சூழலில், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊரடங்கு பிறப்பித்த நாளிலிருந்து பெரும்பாலான சுமை ஆட்டோ உரிமையாளர்கள் காய்கறி வியாபாரிகளாகி விட்டனர். இந்த வேலையில் மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட சுமை ஆட்டோ உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் அதிகாலை 5 மணிக்கு முன்னர் மொத்த விற்பனை சந்தைக்குச் சென்று காய்கறிகளை வாங்கி வந்து நகரப் பகுதிகளில் தெரு, தெருவாகச் சென்று காலை 11 வரை விற்பனை செய்கிறோம்.
அதன்பிறகு நகரப் பகுதிகளில் காவல்துறையினரின் நெருக்கடி காரணமாக நகரிலிருந்து 10 கி.மீ வரை உள்ள கிராமப் பகுதிகளுக்குச் சென்று மாலை 6 மணி வரை வியாபாரம் செய்கிறோம். வீடுகளுக்கே நேரில் சென்று விற்பனை செய்வதால் வரவேற்பு கிடைக்கிறது. எல்லா செலவும் போக ரூ.200 முதல் ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. இது குடும்ப செலவுக்கு போதுமானதாக உள்ளது என்றார்.
நடமாடும் காய்கறி, மளிகை அங்காடிகள் காலத்தின் கட்டாயம்:
நடமாடும் காய்கறி, மளிகை அங்காடிகள் காலத்தின் கட்டாயம் என்பதை கரோனா ஊரடங்கு உணர்த்தியுள்ளது. இதனால் நடமாடும் அங்காடிகளை ஊக்குவித்துத் தொடர்ந்து நடத்திட அரசு உதவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகி ஈ.வி.கே.சண்முகம் கூறியதாவது:
நடமாடும் காய்கறி மற்றும் பழ அங்காடிகளைத் தொடங்க மகளிர் சுய உதவிக்குழுக்களை அரசு ஊக்குவிக்கலாம். இதற்கு வாகனம் வாங்க 50 சதவீத மானியத்தில் கடன் வழங்கினால் மகளிர் குழுவினர் இந்த அங்காடிகளைத் தொடங்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து இத்தகைய அங்காடிகளை நடத்தும்போது கரோனா போன்ற நெருக்கடிக் காலத்தில் காய்கறி, மளிகை போன்ற பொருள்கள் எளிதில் மக்களுக்குச் சென்றடைய வாய்ப்பு ஏற்படும்.
மேலும் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் விவசாயிகளின் விளைபொருட்களும் தேக்கமடையாமல் விற்பனையாகவும், மக்கள் இருப்பிடத்திலேயே காய்கறிகள், மளிகை பொருள்கள் கிடைத்திட வாய்ப்புள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.