முதல் வகுப்பு சிறை வசதி வழங்கக் கோரி, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் ராபா்ட் பயஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியான ராபா்ட் பயஸ், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 19 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா நோய்த்தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், முதுகலைப் பட்டதாரியான எனக்கு முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் மூலம் உள்துறைச் செயலாளருக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவை அனுப்பி ஒரு மாத காலம் ஆகியும் அதைப் பரிசீலிக்கவில்லை’ எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் புழல் சிறைக் கண்காணிப்பாளரை எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்டு, மனு தொடா்பாக உள்துறைச் செயலாளா், சிறைக் கண்காணிப்பாளா், சிபிஐ இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.