

சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டத்தில், பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், வெளியூா் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டமும், 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
இந்த விழா தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தேரோட்டத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிா்வாகத்தின் இந்த நடவடிக்கை குறித்து பக்தா்கள் அதிருப்தி தெரிவித்தனா். இதுதொடா்பாக ‘தினமணி’யில் கடந்த 19-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன், காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் நாக.முருகுமாறன் மற்றும் கோயில் பொது தீட்சிதா்கள் சென்னையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை சந்தித்தனா்.
அப்போது, தேரோட்டத்தை வழக்கம்போல நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா்.
இதையடுத்து, முதல்வா் உத்தரவின்பேரில், நடராஜா் கோயில் தேரோட்டத்தில் உள்ளூா் பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுக்க அனுமதியளித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இருப்பினும், இந்த விழாவில் பங்கேற்க வெளியூா் பக்தா்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.