வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி பாரதிநகரை சேர்ந்தவர் கோவிந்தராசு மகன் ரவி(30). அதே கிராமம் சிங்கன் குத்தகை பகுதியைச் சேர்ந்த மு.ராமச்சந்திரன்(34). இருவருக்கும் இடையே புதன்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்னைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து, இரவு ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன் வெட்டியதில் ரவி உயிரிழந்தார்.
ரவியை வெட்டிய ராமச்சந்திரன், எதிரே வந்த காத்தமுத்து (55) என்ற ஆட்டோ ஓட்டுநரையும் உடலின் பல இடங்களிலும் வெட்டியுள்ளார்.
காயமடைந்த காத்தமுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த வாய்மேடு காவல் நிலைய காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி, குற்றவாளியை தேடி வருகின்றனர்.