தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 6,993 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 6,993 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய பாதிப்பில் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 6,956 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 37 பேர்.
இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,138 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 95,857 ஆனது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 77 பேர் (அரசு மருத்துவமனை -50, தனியார் மருத்துவமனை -27) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 5,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,62,249 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 63,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 24,14,713 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 58 அரசு ஆய்வகங்கள், 59 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 117 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.