
கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 20க்கும் மேற்பட்ட பெண்கள் தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக வங்கிகள் கடன்தொகைகளை செலுத்த பயனாளிகளை நிர்பந்திப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த காளிபாளையம், மேட்டுவலசு, கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது, “நாங்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கி தனியார் நிதி நிறுவனங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடன் பெற்று, வட்டியுடன் சேர்த்து மாதத்தவணைகளாக செலுத்தி வந்தோம்.
இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக வேலை இல்லாததால் தவணைத் தொகைகளை சரிவர செலுத்த முடியவில்லை.
இந்தநிலையில்,நிதி நிறுவனங்கள் கடன் தவணைத்தொகையை அபராத வட்டியுடன் செலுத்தக்கோரி ஊழியர்களை வீடுகளுக்கே அனுப்பி மிரட்டல் விடுத்து வருகின்றன. மேலும், ஒரு சில இடங்களில் கடன் வசூலிக்க வரும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்துவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, கட்டாய வசூலில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தவணைத் தொகைகளை செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் அளிக்க வங்கி அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.